தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்தரபிரதேசத்தில் மட்டும் சுங்கவசூல் அதிகரிப்பு... ஏன்?


இந்தியாவில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு டோல் கட்டணம் தருவது அதிகரித்திருக்கிறது. இது, தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் குறிப்பிடும்படி அதிகரித்திருப்பதாக மத்திய அரசின் தரவுகள் சொல்கின்றன. இதற்கு முக்கிய காரணம் ஃபாஸ்ட்டேக்.








டோல் பிளாசாவில் வாகன நெரிசல் ஏற்படுவதை தடுக்க மத்திய அரசால் கொண்டுவரப்பட்டதுதான் ஃபாஸ்ட்டேக். வாகனத்தில் RF ஐடி பொருத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒன்று ஒட்டப்பட்டிருக்கும். இந்த ஸ்டிக்கரை ஸ்கேன் செய்வதன் மூலம் அந்த குறிப்பிட்ட வாலெட்டில் இருந்த டோல் தொகை தானாகவே டெபிட் ஆகிவிடும். இதனால், வேகமாக டோல் கட்டணம் பெறப்பட்டு வாகன நெரிசல் குறைகிறது.








ஃபாஸ்ட்டேக் லேன்கள் அதிகம் இல்லாத நிலையில், டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஒரு ஃபாஸ்ட்டேக் லேனாவது கட்டாயம் இருக்கவேண்டும் என சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது. இதனால், அனைத்து சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் லேன்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதுதான் தற்போது டோல் கட்டும் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாகியுள்ளது.

 

செப்டம்பர் மாதம் நாளொன்றுக்கு 9.67 லட்சம் பரிமாற்றங்கள் ஃபாஸ்ட்டேக் மூலம் நடந்துள்ளது. 2018 நவம்பரில் வெறும் 18 சதவிகிதமாக இருந்த இந்த பரிமாற்ற அளவு 2019 செப்டம்பரில் 34 சதவிகிதமாக மாறியிருக்கிறது. அதாவது, கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. அதிலும், இந்த ஃபாஸ்ட்டேக் பயன்பாடு தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசத்தில்தான் அதிகமாக உள்ளது.





இந்தியாவில் தற்போது 539 சுங்கச்சாவடிகள் ஃபாஸ்ட்டேக் முறையில் கட்டணம் வாங்குகின்றன. ஃபாஸ்ட்டேக்கின் பயன்பாட்டை இன்னும் அதிகரிக்கவேண்டும் என்பதற்காக இதை பெட்ரோல் மற்றும் பார்க்கிங் கட்டணங்களுக்கும் பயன்படுத்த முயற்சி செய்துவருகிறோம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார்.